திருப்பூர் பனியன் தொழிலாளி வீட்டில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி- 2 பேர் கைது

திருப்பூர் பனியன் தொழிலாளி வீட்டில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி செய்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் கோவில் வழியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 35). பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு சாம்பிராணி போடும் 2 வாலிபர்கள் வந்தனர். வீட்டில் இருந்த மகேஷ்வரனிடம் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் உள்ளது.மேலும் இதனை சரிசெய்யவில்லை என்றால் உங்கள் மகள்களுக்கு திருமணம் தடைபடும். குடும்பத்தில் பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும் என்று அடுக்கடுக்காக கூறினர். இதனை உண்மை என்று நம்பிய மகேஷ்வரன் நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். நாங்கள் பல்லடம் ரோடு பகுதியில் இருந்து வருகிறோம். ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பில்லி சூனியத்தை பூஜை செய்து எடுத்து விடுகிறோம் என்றனர்.

இந்நிலையில் மகேஷ்வரன் தனது நண்பரிடம் இது குறித்து கேட்டபோது உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்று எச்சரித்தார்.

நேற்று மகேஷ்வரன் வீட்டில் இருந்தபோது பில்லி சூனிய பரிகார பூஜை செய்ய வந்தனர். வீட்டுக்குள் அனுமதித்த மகேஷ்வரன் இது குறித்து ரூரல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பரிகார பூஜை செய்ய வாலிபர்கள் தொடங்கினர். சிறிது நேரத்தில் பூஜை செய்தபோதே போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகாபிரபு (23), அவரது உறவினர் கும்பகோணத்தை சேர்ந்த பாலாஜி (24) ஆகியோர் என்பதும். என்ஜினீயரிங் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் யூ டியூப் மூலம் பில்லி சூனியம் எடுப்பது குறித்து பார்த்தோம். இதனை வைத்து மோசடி செய்ய கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டிக்கு வந்தோம்.

கடந்த 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றோம். முதல்நாள் குறிப்பிட்ட குடும்பத்தினரிடம் பில்லி சூனியம் இருப்பதாக கூறி அடுத்த நாள் மாலை அதனை எடுக்க பரிகார பூஜை செய்வதாக நடித்து மோசடி செய்வோம் என்றனர். இதனையடுத்து போலீசார் என்ஜினீயரிங் பட்டதாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com