திருப்பதி கோவிலில் நாளை கருட சேவை - சென்னை, வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருப்பதி கோவிலில் நாளை கருட சேவை நடைபெறுவதால் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #TirupatiTemple
திருப்பதி கோவிலில் நாளை கருட சேவை - சென்னை, வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

வேலூர்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.

விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

இதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.

மேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #TirupatiTemple

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com