திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு மாதம் ஒரு முறையே தரிசனம்- தேவஸ்தானம் ஆலோசனை

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்குவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. #Tirupati #TirupatiTemple
திருப்பதி கோவிலில் விஐபிக்களுக்கு மாதம் ஒரு முறையே தரிசனம்- தேவஸ்தானம் ஆலோசனை
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு நாள்தோறும் அதிகாலை முதல் காலை 10 மணி வரை 3 பிரிவுகளில் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தரிசனம் வி.ஐ.பி.க்கள், நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

இவற்றை கவனிப்பதற்கு தனித்தனியாக மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் வி.ஐ.பி.க்கள் வரும்போது அவர்களுக்குத் தேவையான தரிசன வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனர்.

இதுதவிர, வி.ஐ.பி.க்கள் தினசரி பிரேக் தரிசனத்திற்காக பலருக்கும் பரிந்துரை கடிதங்களை வழங்குகின்றனர். அவ்வாறு அவர்கள் வழங்கும் கடிதங்களை முதலில் சமர்ப்பிக்கப்படும் கடிதங்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் முன்னுரிமை வழங்கி வருகிறது.

இந்நிலையில், பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளதால் சாமானிய பக்தர்களுக்கு காலையில் 10 மணிக்கு மேல்தான் தரிசனம் வழங்கப்படுகிறது.

இதனால் காத்திருப்பு அறையில் இருக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு விரைவாக தரிசனம் வழங்குவதற்கு தேவஸ்தானம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வி.ஐ.பி.க்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் வழங்குவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை குறைவதோடு, சாமானிய பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் அளிக்க முடியும் என்று தேவஸ்தானம் கருதுகிறது.

எனினும், இந்த யோசனையை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் ஒப்புக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. #Tirupati  #TirupatiTemple

X

Maalai Malar
www.maalaimalar.com