

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-
வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகளும் இப்போதிலிருந்தே தொடங்கப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றமும், அக்டோபர் 4-ந்தேதி கருட சேவை, 7-ந்தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின் இறுதி நாளான 8-ந்தேதி சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதனையொட்டி போக்குவரத்து, பாதுகாப்பு, அன்னதானம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. வரும் 9-ந் தேதி வரலட்சுமி விரத விழா நடைபெற உள்ளதை யொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 3-ம் வாரத்திலிருந்து லட்டு பிரசாதத்திற்கு சணல் பைகள் உபயோகப்படுத்தப்படும். திருமலையில் பிளாஸ்டிக்கை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நடந்த பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில், இணை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 18-ந்தேதி முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் புரோட்டோக்கால் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆதலால் தினமும் 4,500 முதல் 5,000 வரை சாமானிய பக்தர்கள் கூடுதலாக சாமியை தரிசித்து வருகின்றனர். இதுவே இனி தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.109.60 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட ரூ.75,009 அதிகமாகும்.