திருக்கோவிலூர் அருகே இளம்பெண் எரித்து கொலை- கணவன் கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் பட்டு இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் எரித்து கொலை- கணவன் கைது
Published on

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் சென்னையில் டைல்ஸ் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக சென்னையில் தங்கியிருந்து விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து சென்றார். இவரது மனைவி ரீனா (31). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

ரமேசுக்கு தனது மனைவி ரீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னையில் இருந்து மேட்டுச்சேரிக்கு வந்தார். நீ நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இனிமேல் ஒழுங்காக இரு என ரீனாவிடம் கூறினார். அதற்கு ரீனா, நீங்கள் தான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகம் படுகிறீர்கள் என்றார். இதில் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி ரமேஷ் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து ரீனாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று ரீனா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

உடல் கருகிய நிலையில் இருந்த ரீனாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இரவு ரீனா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com