

சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சொந்த வேலை நிமித்தம் காரணமாக இன்று காலை மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி- எருமாபாளையம் பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் டிப்பர் லாரியில் சிக்கி கை, கால் நசுங்கி படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.