

திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்(வயது 22). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த சிறுமி தனது தாயாருடன் திண்டிவனத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். நேற்று மதியம் அந்த சிறுமி குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, பின்புறமுள்ள கழிப்பறைக்கு சென்றார். அந்த சமயத்தில் அந்த குழந்தை படிக்கட்டில் இருந்து இறங்க முயன்றபோது, தவறி கீழே விழுந்தது. இதில் மயங்கி கிடந்த குழந்தையை சிறுமியின் தாயார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.