

நாகர்கோவில்:
நாகர்கோவில் தேரேகால்புதூர் நாஞ்சில் நகர் பகுதியை சேர்ந்த சுனில். இவரது வீட்டின் பின்புறம் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. நேற்று நாகர்கோவில் பகுதிகளில் இடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அப்போது திடீரென தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 தென்னை மரங்களும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதேபோல் வடசேரி கருப்பு விநாயகர் தெருவை சேர்ந்த நம்பிராஜன் என்பவரது வீட்டில் இருந்த ஒரு தென்னை மரத்திலும் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.