ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் - மத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஆய்வு

ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கோவில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்புதுறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் - மத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஆய்வு
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் புனித தலமாகும். மேலும் 12 ஜோதிலிங்க கோவில்களில் 11 ஜோதி லிங்கம் கோவில்கள் வட மாநிலத்தில் உள்ளது. தென் மாநிலத்தில் உள்ள ஒரே ஜோதி லிங்கம் அமைந்துள்ள தலம் ராமேசுவரம் கோவிலாகும்.

ஆதலால்தான் இந்த கோவிலுக்கு வட மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் செல்போன், பேக் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடையும் விதிக்கப்பட்டு, அனைவரையும் மெட்டல் டிடெக்கர் கருவி மூலம் கண்காணித்து கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்து வருகின் றனர்.

இந்த நிலையில் கோவில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்புதுறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புதுறையின் கமாண்டர் ஜெகநாதன் தலைமையில் 4 பேர் குழுவினர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

இவர்கள் ராமேசுவரம் மத்திய உளவுப்பிரிவு போலீசார் மற்றும் ராமேசுவரம் கோவில் காவல் நிலைய போலீசார் மற்றும் கோவில் பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் கோவிலின் உள்பகுதிக்கு சென்றனர்.

அங்கு கோவில் மூன்றாம் பிரகாரம், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் 2-ம் பிரகாரம் ஆகிய பகுதிகளையும், கோவிலின் மேல்தளத்திற்கு சென்று ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களையும், கோவிலை சுற்றியுள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள், கோவில் கோட்டை சுவர் மீது இணைக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் விடுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,கோட்ட பொறியாளர் மயில் வாகணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com