தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் ஜஸ்டின் செல்வ மிதிஷ் (வயது 29). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த மே மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கேற்று உள்ளார். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஜஸ்டின் செல்வ மிதிஷ் தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு கடந்த 22-5-2018 முதல் 29-6-2018 வரை உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேலும் கலவரத்தில் காயம் அடைந்ததால் அரசு சார்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் ஜஸ்டின் செல்வமிதிசுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜஸ்டின் செல்வ மிதிசின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 23-9-2018 அன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, அதற்கான சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பிறகு கடந்த 9-ந் தேதி டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, 10-ந் தேதி மீண்டும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்தார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் ஜஸ்டின் செல்வமிதிஷ் பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com