துப்பாக்கி சூடு சம்பவம் - தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் 3-வது நாளாக விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
துப்பாக்கி சூடு சம்பவம் - தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் 3-வது நாளாக விசாரணை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததையடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற வக்கீல் ஏ.ராஜராஜன் கோரிக்கை விடுத்தார். இதனை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் புபுல் தத்தா பிரசாத் தலைமையில் டி.எஸ்.பி. ராஜ்பிர் சிங், ஆய்வாளர்கள் லால் பகர், நித்தின்குமார், அருண் தியாகி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி வந்து விசாரணையை தொடங்கினர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில், இக்குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூட்டில் பலியான 8 பேரின் குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

துப்பாக்கி சூட்டில் பலியான மணிராஜ், ஸ்னோலின், கிளாட்சன், சண்முகம், ஜெயராமன் ஆகியோரது குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் மற்றும் தாசில்தார் கண்ணன், சந்திரன், சேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் இன்று மனித உரிமை ஆணையம் முன்பாக ஆஜரானார்கள். அவர்களிடம் மனித உரிமை ஆணைய குழுவினர் பல்வேறு விவரங்களை கேட்ட‌னர்.

வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்கள் இக்குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். இதன் முடிவில் விசாரணை அறிக்கையை அவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com