

தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இரவில் சட்டவிரோதமாக வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் ரேஸ் சென்றனர்.
தொண்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த டிரைசைக்கிள் தொழிலாளி ரபீக் என்பவரது மகன் முகமது யாசீம் (20), நாகூர் கனி மகன் சேக் அப்துல்லா (21), ஓடாவி தெருவைச்சேர்ந்த சேக்காதி மகன் முகமது நாசித் (23) மற்றும் சில வாலிபர்கள் தங்களுக்குள் யார் முந்திச்செல்வது என்ற போட்டி வைத்துக்கொண்டு அதிவேகமாக சென்றனர்.
தொண்டி அருகே பெருமாளேந்தல் வளைவுப் பாதையில் மோட்டார் சைக்கிள் திரும்பும்போது தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில் முகமது யாசீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.