உயிரிழந்த கர்ப்பிணி யானை
உயிரிழந்த கர்ப்பிணி யானை

இணையத்தில் வைரலாகும் கேரளா கர்ப்பிணி யானை கொலையாளியின் புகைப்படம்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்தது இவர் தான் என கூறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்கு வந்தது. இந்நிலையில், யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர்.

அதனை நம்பி வாங்கி உண்ட யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது.

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து உயிரிழந்தது.

அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்தது யார் என்ற கேள்வி தொடர்ந்து மர்மமாக இருக்கும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பரிதாபமாக உயிரிழந்த யானையின் புகைப்படத்துடன் மற்றொரு மர்ம நபரின் புகைப்படம் இணைக்கப்பட்டு, இவர் தான் யானைக்கு பட்டாசுகள் நிறைந்த அன்னாசி பழத்தை கொடுத்தது என கூறும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படத்தில் இருக்கும் நபர் கர்ப்பிணி யானையை கொலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படத்தில் இருக்கும் நபர் 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்து பொது மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவரது புகைப்படம் 2018 ஆம் ஆண்டு வைரலானது. பல செய்தி நிறுவனங்கள் இவரது உயிரிழப்பு பற்றிய செய்திகளை வெளியிட்டன. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பவர் யானைக்கு பட்டாசுகள் நிறைந்த அன்னாசி பழத்தை கொடுக்கவில்லை என உறுதியாகிவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com