

திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாமந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45).
இவர் விக்கிரவாண்டியில் உள்ள உதவி கல்வி அலுவலகத்தில் பதிவு எழுத்தராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
அரசூர் அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற ராஜசேகரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.