8 வழி சாலைக்கு எதிராக கருத்து கூறியதாக கைதானவர்களை விடுதலை செய்யவேண்டும்- திருநாவுக்கரசர்

சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு எதிராக கருத்து கூறியதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்தார். #GreenwayRoad #thirunavukkarasar
8 வழி சாலைக்கு எதிராக கருத்து கூறியதாக கைதானவர்களை விடுதலை செய்யவேண்டும்- திருநாவுக்கரசர்
Published on

ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலத்தில் இருந்து சென்னை வரை 8 வழி சாலைக்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தியோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோ, கைது செய்தோ ஒரு திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்க கூடாது. மக்களின் சம்மதம் பெற உரிய நஷ்டஈடு வழங்கி, அதை மக்கள் ஏற்றுக்கொண்டு நிலத்தை கொடுத்தால்தான் செய்ய வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களை அச்சுறுத்தி நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். மக்களுக்கான திட்டங்கள்தான் இருக்க வேண்டும். திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது. மக்கள் சம்மதம் இன்றி கட்டாயப்படுத்தி திட்டத்தை திணிக்கக்கூடாது.

இந்த 8 வழி சாலைக்கு எதிராக கருத்து சொன்னதற்காக கைது செய்யப்படுவது பாசிச போக்கு ஆகும். இது கருத்து சுதந்திரத்தை நெரிக்க கூடிய செயலாகும். எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

நீட் தேர்வினால் வட மாநிலத்தினர் அதிகமாக தேர்வு செய்யப்படுவது வருத்தப்படக்கூடியது. இதனால்தான் நீட் தேர்வு வேண்டாம், அதை சில காலம்வரை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

லோக் அயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்க கொண்டு வரப்படும் சட்டமாகும். இதில் கட்சிகள் பிரச்சினை அல்ல. அரசு அதிகாரத்தில் ஊழல் செய்பவர்கள் பயப்படவேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #GreenwayRoad #thirunavukkarasar

X

Maalai Malar
www.maalaimalar.com