

பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள ஓணான்டிபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (26).
நேற்று இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்திற்கு புறப்பட்டனர். சாத்தங் குடி-கண்டுகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கணவர்-மனைவி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த கவிதா கணவர் கண் முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய கண்ணன் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவமணி (31) ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews