

தேனி வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவலறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் சிவனாண்டி, அவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்றும், அவர், பல ஆண்டுகளாக சந்தையில் தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழிலாளியாக வேலை பார்த்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவர் ஆதரவற்ற நிலையில், தங்குவதற்கு வீடு இன்றி வாரச்சந்தையிலேயே தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே அவருடைய பிணத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் செய்யப்படவில்லை. ஆதரவற்ற நிலையில் கிடந்த பிணத்தை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 பேர் ஒரு தள்ளுவண்டியில் வைத்து தேனி பள்ளிவாசல் தெருவில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அவர்களுடன் போலீஸ்காரர் ஒருவரும் சென்றார்.
ஆதரவற்ற நிலையில் இருந்த சிவனாண்டிக்கு, மரணத்துக்கு பின்னும் ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்து அடக்கம் செய்யாமல், தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலம் நடத்தியது மனித நேயம் மரித்துப் போய்விட்டதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதுகுறித்து தேனி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பிணம் கிடப்பதாக தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விசாரணை நடத்தியபோது இயற்கையான மரணம் என்று தெரிய வந்தது. மேலும், அவர் அடையாளம் தெரிந்த நபர் என்பதால் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் பிணத்தை வைத்து மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்’ என்றார்.
நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, ‘வழக்கமாக இதுபோன்ற பிணங்களை போலீசார் தான் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டு செல்வார்கள். நகராட்சி மூலம் பிணத்தை எடுத்துச் செல்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் முறையான கடிதம் கிடைக்கப்பெறவில்லை. பிணத்தை அப்புறப்படுத்தும் பணிக்காக துப்புரவு பணியாளர்கள் உதவிக்கு சென்றுள்ளனர்’ என்றார்.
தேனி கிராம நிர்வாக அலுவலர் குமரேசனிடம் கேட்டபோது, ‘எனக்கு தகவல் கிடைத்தபோது, நான் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு சென்று இருந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு போலீசாருக்கும், சுகாதார அலுவலருக்கு தகவல் கொடுத்து இருந்தேன். கோர்ட்டில் இருந்து வந்து, முறையான கடிதம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தேன். அதற்குள் தள்ளுவண்டியில் பிணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்’ என்றார்.
அரசு இலவச அமரர் ஊர்தி சேவையை செயல்படுத்தி வருகிறது. அதை பயன்படுத்தி இருந்தாலே தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது, என்பது பலரது ஆதங்க குரலாக ஒலித்தது.
அடையாளம் தெரியாத பிணம் கிடந்தால் போலீசார் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது வழக்கம். அதுவே அடையாளம் தெரிந்த நபர் இயற்கையாக உயிரிழந்து இருந்தால் பெரும்பாலும் வழக்குப்பதிவு செய்வது கிடையாது. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் போலீசாரே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது தேனியில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாமல் தள்ளுவண்டியில் பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.