திருப்புவனம் வைகையாற்றில் தொடர் மணல் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்புவனம் வைகையாற்றில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனம் வைகையாற்றில் தொடர் மணல் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

திருப்புவனம்:

திருப்பவனத்தை சுற்றிலும் வைகை ஆற்று பகுதியில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சில இடங்களில் மாட்டு வண்டிகளில் அள்ளி வந்து தனிநபருக்கு சொந்தமான தோட்டங்களில் கொட்டி வைத்து அதன் பின்னர் லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். திருப்புவனம் நகர் பகுதியில் அதிகாலை முதல் 9 மணி வரை இரு சக்கர வாகனங்களில் ஒரு நடைக்கு 10-ல் இருந்து 20 சாக்குகள் வீதம் அடுக்கி மெயின் சாலையிலேயே மணலை கடத்தி வருகின்றனர்.

சில இடங்களில் பெண்கள் சாக்குகளில் அள்ளி தலைச்சுமையாக கொண்டு செல்கின்றனர். திருப்புவனத்தில் உள்ள வைகை மேம்பாலம் அருகே மதுரை, திருப்புவனம், அருப்புக்கோட்டை ஆகிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வைகையாற்றின் கீழ்பகுதியில் திருப்புவனம் புதூர், மடப்புரம் மற்ற கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடரும் மணல் கடத்தலால் குடிநீர் திட்டங்களில் நீர் ஆதாரம் குறைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

வைகையாற்றின் கரையோரங்களில் 20ஆண்டிற்கு முன்பு குடிநீர் ஆதாரம் நல்ல முறையில் இருந்து வந்தது. தற்சமயம் கடும் வெயில் காரணமாகவும், இந்த பகுதியில் நடைபெறும் மணல் திருட்டாலும் நீர் மட்டம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. வைகையாற்று கரையோரம் முன்பு தென்னந்தோப்பு அதிகமாக இருந்து வந்தது. ஒவ்வொரு தோப்பிலும் 300முதல் 500வரை தென்னமரங்கள் இருந்தது. அப்போது நல்ல பயிர் விளைச்சல் இருந்து வந்தது. தென்னை விவசாயிகள் அதிக தேங்காய்களை வெட்டி நல்ல வருமானத்தை பெற்றனர்.

ஆனால் இன்று தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் குறைவாக உள்ள தென்னமரங்களில் போதிய விளைச்சல் இல்லை. தற்போது உள்ள கடுமையான வெயிலால் சில மரங்கள் கருகி வருகின்றன. முன்பு 3 மணி முதல் 4 மணி வரை தண்ணீர் பாய்ச்சிய இடத்தில் தற்போது 20 மணி நேரம் வரை பாய்ச்சும் நிலை உள்ளது. வைகையாற்றில் நடைபெறும் இந்த மணல் திருட்டால் சில இடங்களில் பெரிய, பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இந்த பள்ளங்களில் இரவு நேரத்தில் திருடர்கள் பதுங்குவதற்கு மிகவும் வசதியாகவும் உள்ளது.

இப்பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்றால் வைகையாற்றில் செயல்பட்டு வரும் பல குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் வரும். எனவே சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இந்த மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருப்புவனம் பகுதியில் உள்ள குடிநீர் திட்டங்கள் தப்பிக்கும். மாறாக தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் திருப்புவனம் வைகை ஆற்று பகுதி பாலைவனமாக மாறும் நிலை உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com