கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்- தியேட்டர் அதிபர்கள் சங்கம்

அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து 16-ந்தேதி முதல் திரையரங்குகளை மூடுவது என்று தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்- தியேட்டர் அதிபர்கள் சங்கம்
Published on

சென்னை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளது. கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

திரையரங்குகளுக்கு அரசு 8 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கான லைசென்ஸ் தற்போது வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. அதனை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளவும், திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை குறைத்துக்கொள்ளவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

திரையரங்கு பராமரிப்புக்கு குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களுக்கு ஒரு ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களுக்கு 50 காசும் வழங்கப்படுகிறது. இந்த பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களுக்கு 5 ரூபாயாகவும், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களுக்கு 3 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை ஏற்கனவே அரசிடம் தெரிவித்து உள்ளோம். அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால். இதுவரை அரசாணை பிறப்பிக்கவில்லை. இதனால் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com