

உடுமலை, ஆக.10-
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் ஒன்றான இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது நான்காம் மண்டலத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பையொட்டி ஒரு வாரத்துக்கு முன்பே பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் நீர் கசிவு காரணமாக ஓரிரு நாட்கள் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு 808 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 752 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையின் போது போதிய அளவு மழை பெய்ததால் பி.ஏ.பி., அணைகளின் தாய் அணையான சோலையார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து அதே நிலையில் உள்ளது. 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 63. 82 அடியாக உள்ளது . திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 53அடியாக உள்ளது.