

சென்னை:
காங்கேயம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றியவர் ஜெயமணி. கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி பந்தோபஸ்து பணிக்காக வெளியூர் சென்றுவிட்டு, சொந்த ஊர் செல்ல பஸ்சுக்காக ஆதியூர் சந்திப்பில் இரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் என்ற ஜெய்சங்கர், ஜெயமணியை காளிப்பாளையம் பகுதிக்கு வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ஜெயமணியை கொலை செய்து, அவரிடம் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக அவினாசி பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளிர் கோர்ட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக்கோரி ஜெயமணியின் தாயார் பி.மாரியம்மாள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். #tamilnews