கோவை போலீசாரை கண்டித்து திருப்பூர் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

சரண் அடைந்த வாலிபரை கோர்ட்டுக்குள் புகுந்து இழுத்து சென்ற சிங்கா நல்லூர் போலீசாரை கண்டித்து திருப்பூர் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை போலீசாரை கண்டித்து திருப்பூர் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
Published on

திருப்பூர்:

கோவை சிங்கா நல்லூரில் கடந்த 3-ந் தேதி ஆட்டோ டிரைவர் சிட்டி பாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிலரை போலீசார் தேடி வந்தனர்.

ஆட்டோ டிரைவர் சிட்டி பாபு கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த கோவை குனியமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் (29) திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1 ல் சரண் அடைந்தார்.

மாஜிஸ்திரேட்டு கவியரசு அவரை கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சந்தோஷ் கோர்ட்டுக்குள் அமர்ந்து இருந்தார்.

அப்போது ஒரு காரில் சிங்காநல்லூர் போலீசார் 3 பேர் அங்கு வந்தனர். சாதாரண உடையில் வந்து இருந்த 2 போலீசார் கோர்ட்டுக்குள் புகுந்து சந்தோசை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து சென்று காரில் ஏற்ற முயன்றனர்.

இதனால் சந்தோஷ் கூச்சல் போட்டார். இதனை கேட்டதும் வக்கீல்கள் திரண்டு வந்தனர். கோர்ட்டுக்குள் இருக்கும் ஒருவரை எப்படி அழைத்து செல்லலாம்? என வக்கீல்கள் சிங்காநல்லூர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சந்தோஷ் மீண்டும் கோர்ட்டுக்குள் கொண்டு வரப்பட்டார். இது தொடர்பாக வக்கீல்கள் சிலர் மாஜிஸ்திரேட்டிடம் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசாரை கோர்ட்டுக்குள் அழைத்து மாஜிஸ்திரேட்டு கடுமையாக எச்சரித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கோர்ட்டு வளாகத்தில் ஒரு புறத்தில் சிங்காநல்லூர் போலீசாரும் மறு புறத்தில் வக்கீல்களும் திரண்டு நின்றனர்.

இதனால் பரபரப்பு உருவானது. நிலைமையை சமாளிக்க சிங்காநல்லூர் போலீசாரை திருப்பூர் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.அதன் பின்னர் பரபரப்பு அடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை 3 வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலீசாரின் அத்து மீறிய செயலை கண்டித்து இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி, போலீஸ் கமி‌ஷனருக்கு கடிதம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பூர் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் சுமார் 600 வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com