இத்தாலி தூதரகத்தில் தமிழக ஓவியர் ஏ.பி ஸ்ரீதரின் ஓவிய கண்காட்சி

இந்தியா - இத்தாலி இடையே உள்ள உறவின் 70 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்நாட்டு தூதரகத்தில் தமிழக ஓவியர் ஏ.பி ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இத்தாலி தூதரகத்தில் தமிழக ஓவியர் ஏ.பி ஸ்ரீதரின் ஓவிய கண்காட்சி
Published on

உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி.

சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான். உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும்.

இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனைக்கு, தனது தூரிகைகளால் உயிர் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இந்தோ - இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக A.P.ஸ்ரீதரின் ஓவியங்கள் “The Cadent Coalition” என்னும் தலைப்பில் புது டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலிய தூதரகமும், இந்திய கலாச்சார மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இக்கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் திரு.ரீவா கங்குலி தாஸ் (Director General, ICCR) மற்றும் இந்தியாவுக்கான இத்தாலி தூதர் லோரான்சோ ஏஞ்சலோனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும், இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு ஓவியர் A.P.ஸ்ரீதரை வாழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com