ரோட்டில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்- பொதுமக்கள் பாராட்டு

உசிலம்பட்டி அருகே ரோட்டில் கிடந்த ரூ.10 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
மணிபர்சை உரியவரிடம் போலீசார் முன்னிலையில் ஒப்படைத்த சிறுவன் அபிஷேக்
மணிபர்சை உரியவரிடம் போலீசார் முன்னிலையில் ஒப்படைத்த சிறுவன் அபிஷேக்
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெரியபாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமன்.

இவர் சம்பவத்தன்று கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் வைத்திருந்த மணிபர்ஸ் மாயமானது. அதில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

பல இடங்களில் தேடிப் பார்த்தும் மணிபர்ஸ் கிடைக்கவில்லை. இது குறித்து உசிலம்பட்டி டிவுன் போலீசில் பரமன் புகார் செய்திருந்தார்.

கீழப்புதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அபிஷேக் (வயது 5). முதல் வகுப்பு படித்து வரும் இவன் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஒரு மணிபர்ஸ் கிடந்ததை பார்த்த அபிஷேக் அதை எடுத்து தனது தந்தையிடம் ஒப்படைத்தான். பர்சில் ரூ. 10 ஆயிரம் இருந்ததை பார்த்த செல்வம் போலீஸ் நிலையத்தில் ஏதேனும் மணிபர்ஸ் தொலைந்த வழக்குகள் பதிவாகியிருக்கிறதா? என விசாரித்தார்.

அப்போது பரமன் மணிபர்ஸ் தொலைந்தது தொடர்பாக புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வரவழைத்து விசாரணை நடத்தியதில் சிறுவன் அபிஷேக் கண்டெடுத்த மணிபர்ஸ் பரமனுடையது என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பணம் மற்றும் மணிபர்ஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரோட்டில் கிடந்த மணிபர்சை தந்தையிடம் கொடுத்து உரியவரிடம் சேர்க்க உதவிய சிறுவன் அபிஷேக்கை போலீஸ் உயர் அதிகாரிகளும், அந்த பகுதி மக்களும் பாராட்டி வாழ்த்தினர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com