

தா.பேட்டை:
துறையூர் தாலுகா கண்ணனூர் அருகே அய்யாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துறையூர் தாசில்தார் பிரகாஷ் தலைமையிலான வருவாய் துறையினர் கண்ணனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்ணனூர் அய்யாற்றில் சிலர் டிராக்டர் வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். வருவாய் துறையினர் அங்கு வருவதை பார்த்ததும் டிராக்டர் வண்டியுடன் அவர்கள் தப்பியோடி உள்ளனர்.
உடனே வருவாய்துறையினர் அவர்களை பிடிக்க துரத்தி சென்றனர். இதனால் அவர்கள் டிராக்டர் வண்டியை வழியிலேயே நிறுத்தி விட்டு அனைவரும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்துறையினர் அதை ஜெம்புநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.