

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
இந்த சூழ்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. 8,250 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் தெரிவித்த பதில்கள் பல்வேறு புதிய தகவல்களை அளிக்க கூடியவையாக இருந்தன.
தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பிரதமர் பதவிக்கு மோடியை ராகுல் காந்தி முந்துகிறார் என்ற அதிரடி தகவலை மக்கள் தெரிவித்தனர்.
இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? என்றும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அ.தி.மு.க. வாக்குகளில் சிறிதளவு டி.டி.வி.தினகரனுக்கு செல்லும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ரஜினி, கமல், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் சிறிய கட்சிகள் 4-ல் 1 பங்கு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.