

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.