7-ந்தேதி சேவையை தொடங்க ஆயத்தம் : இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரெயில்களை இயக்கி சோதனை

சென்னையில் வருகிற 7-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று முதல் கூடுதலாக ரெயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில்
மெட்ரோ ரெயில்
Published on

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து வருகிற 7-ந்தேதி முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் இயக்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதனைதொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் ரெயிலை இயக்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் மெட்ரோ ரெயில்களை இயக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து பயணிகளை பாதுகாப்பாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்களை தொடர்ந்து இயக்காமல் இருந்தால் மின்சார கட்டமைப்பு, சிக்னல்கள், தானியங்கி கருவிகளில் பழுது ஏற்பட்டு விடும். இதனால் சேவை நிறுத்தப்பட்ட 5 மாதங்களிலும் தினசரி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளையும் 2 வழித்தடத்திலும் தலா ஒரு ரெயில் பயணிகள் இன்றி இயக்கப்பட்டது. இதனால் கட்டமைப்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கான சேவை தொடங்கிய பின்னர் தங்கு தடையின்றி மெட்ரோ ரெயில்களை இயக்க வேண்டும். இதனால் தற்போது தினசரி 2 வேளை இயக்கப்படும் ரெயில்களுடன், கூடுதலாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2 வழித்தடத்திலும் ரெயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் உயர் மின்னழுத்த பாதையில் எங்கேயாவது பழுது இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வாறு பழுது ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் சீர் செய்வதற்கான என்ஜினீயர்களும் தயார் நிலையில் உள்ளனர். பொதுவாக சிக்னல் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக அவற்றின் தரம், நிலையை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பயணிகளுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் அளிக்கப்படும் ரெயில் சேவையை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com