

புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காந்தியின் கொள்கைகளை பரப்பும் வகையில் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் நடைபெற்றன. இதனால் நாட்டின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் , தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் படை போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் தலைநகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.