கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ
Published on

 லாஸ் ஏஞ்சல்ஸ்:

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது சான்டா கிளாரிட்டா நகர். இயற்கை எழில் மிகுந்த இந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் காடுகள் உள்ளன. நேற்று பிற்பகல் அளவில் அப்பகுதியில் உள்ள காடுகளில் காட்டுத்தீ பற்றியது. அதிவேகமாக பரவிய காட்டுத்தீயால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் 5,000 ஏக்கர் அளவிலான காடுகள் தீக்கிரையாகின.

தீயை அணைக்க தீயணைப்பு படை வீரரகளும், மீட்புப்படையினரும் போராடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள், ஏர் டேங்கர்கள் முயற்சியோடு தீயை அணைத்து வருகின்றனர். 

கடுமையான சூறைக் காற்று, அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவியுள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் வடக்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒயின் கண்ட்ரி பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 2,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டனர். அப்பகுதியில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நூறு ஏக்கர்களில் பற்றிய காட்டுத்தீ, 16,000 ஏக்கர்கள் அளவிற்கு பரவியுள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வடக்கே 75 மைல் (120 கிலோமீட்டர்) காட்டுத்தீ பரவியுள்ளதாகவும், வடக்கு கலிபோர்னியாவின் பெரும்பகுதியும், தெற்கின் சில பகுதிகளும் தீ விபத்துக்குள்ளாகும் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள சான் பெர்னார்டினோ கவுண்டியில் ஏற்பட்ட மற்றொரு காட்டுத்தீ காரணமாக 75 ஏக்கர் அளவிலான பகுதிகள் எரிந்து நாசமாகின. மேலும் அங்குள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக மாநிலத்தின் வடக்கு பகுதியில் சுமார் 180,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் வசித்து வந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக வறட்சி மற்றும் வறண்ட தாவரங்களால் காட்டுத்தீ ஏற்படுகிறது. கலிபோர்னியாவில் கடந்த 2017-2018ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com