சிலை கொள்ளை வழக்கு விசாரணையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் - பொன்.மாணிக்கவேல்

நாறும்பூநாதர் கோவில் சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ளவர்களை பிடித்து விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கூறினார். #PonManickavel
சிலை கொள்ளை வழக்கு விசாரணையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் - பொன்.மாணிக்கவேல்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பழவூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நாறும்பூநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணன், அஷ்டதேவர், நடராஜர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, தெய்வானை, விநாயகர் மற்றும் நாறும்பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய ஐம்பொன்னால் ஆன 13 சிலைகள் இருந்தது. இதனை கடந்த 2005-ம் ஆண்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கு சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கொள்ளை போன 13 சிலைகளில் தெய்வானை, பெரும்பொதி விநாயகர், விநாயகர், நாறும் பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய 4 சிலைகளை தவிர மற்ற 9 சிலைகளையும் கடந்த 2008-ம் ஆண்டு சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமாக செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பழவூர் கோவில் நிர்வாகத்திடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தீனதயாளன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட நடராஜர் சிலையில் கை துண்டிக்கப்பட்டு பின்பு இணைக்கப்பட்டுள்ள விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. இதன் பேரில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று தொல்லியல் துறை தொழில்நுட்ப பிரிவினருடன் பழவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு வந்தார். அங்கு துண்டிக்கப்பட்ட நடராஜர் சிலையையும், துண்டிக்கப்பட்ட கையின் உலோக தன்மையின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

இக்கோவிலில் 4 சிலைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது விசாரணையை நிறுத்தி வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகிறோம். இதன்படி நடராஜர் சிலையின் வலது கை துண்டிக்கபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக தொல்லியல் துறையின் தொழில்நுட்ப பிரிவினர் இன்று (நேற்று) ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், விஞ்ஞான ரீதி அறிக்கையில் உலோகத்தன்மையின் வேறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடராஜர் சிலையில் கைகள் துண்டிக்கப்பட்டு சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. கைகள் இணைக்கப்பட்ட தொழில் நுட்பம் இந்தியாவில் கிடையாது. எனவே சர்வதேச தொழில்நுட்பத்தில் கைகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரித்து விசாரணையை ஓரிரு மாதங்களில் முடிப்போம்.

இந்த வழக்கு தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com