

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கல்லாங்குளம். இங்கு 100 வருடங்கள் பழமையான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீபம், சிவராத்திரி மற்றும் ஒவ்வொரு பவுர்ணமி, பிரதோஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இதனால் கோவிலில் உள்ள உண்டியலை அங்குள்ள ஒரு சிமெண்ட் தூணில் கட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வசதியாக தொங்க விடப்பட்டிருந்தது. நேற்று பிரதோஷத்தையொட்டி அர்ச்சகர் விஜயகுமார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து விட்டு, இரவு 9 மணிக்கு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு கோவிலுக்கு வந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து அர்ச்சகர் விஜயகுமார் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். #tamilnews