கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை- வாலிபர்கள் 3 பேர் கைது

கச்சிராயப்பாளையம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த பெரம்பலூர் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கச்சிராயப்பாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் மெயின் ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் அருகே ஒரு கார் நின்றது. காரின் அருகே மர்மநபர்கள் 3 பேர் அமர்ந்தபடி கோவில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்த காரில் ஏறி சோமண்டார்குடி செல்லும் சாலையில் தப்பிச் சென்றனர். இதனால் உ‌ஷாரான போலீசார் மர்மநபர்கள் சென்ற காரை விரட்டிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. உடனே காரில் இருந்த 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். இதைபார்த்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் மடக்கி பிடித்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் காரியனூர் கிராமத்தை சேர்ந்த ராமு மகன் பிரகா‌‌ஷ்(வயது 20), அதேஊரை சேர்ந்த செந்தில் மகன் திவாகர்(20), நடராஜன் மகன் மணிகண்டன்(21) ஆகியோர் என்பதும் கச்சிராயப்பாளையம் அடுத்த காரனூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஓம்சக்தி கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து எடுத்து வந்து குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் அருகே வைத்து உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னசேலம் அடுத்த பாடியந்தல் ஓம்சக்தி கோவில் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு காரில் சென்று நள்ளிரவு நேரத்தில் கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததுடன், கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கைதான பிரகா‌‌ஷ் பெரம்பலூரில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com