தெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் - டாக்டர்கள் மீது வழக்கு

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்களாவில் வளர்ந்து வந்த செல்ல நாய் மரணமடைந்ததை அடுத்து, அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள அரசு பங்களாவான பிரகதி பவனில் வசித்து வருகிறார்.

இந்த பங்களாவில் 11 செல்ல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் ‘ஹஸ்கி’ வகையை சேர்ந்த 11 மாத நாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை மோசமானது. இதனால் உடல் கடுமையாக கொதித்தது.

சைவம் மட்டுமே சாப்பிடும் இந்த குட்டி நாயால் பால் கூட குடிக்க முடியவில்லை. மூச்சு விடவும் சிரமப்பட்டது. இதனால் அந்த நாயை பராமரிக்க வந்த ஆசிப் அலி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சரா ஹில்சில் இருக்கும் தனியார் விலங்குகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த கால்நடை டாக்டர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் சிகிச்சை அளித்தும் பலனின்றி நாய் இறந்துவிட்டது.

இதையடுத்து ஆசிப் அலி, பஞ்சரா ஹில்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் சரியான மருத்துவ சிகிச்சைகள் அளிக்காததால் தான் செல்ல நாய் இறந்து விட்டது. இதற்கு காரணமான கால்நடை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் கால்நடை டாக்டர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 429 மற்றும் மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவு 11(4) ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தெலுங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com