

வேலூர்:
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் (ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு) சார்பில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக புதிய ஊதியத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி இன்று பேரணி அறிவிக்கப்பட்டது.
இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து கோட்டையை நோக்கி செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், வேலூர் மாவட்டம் வழியாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சென்ற வாகனங்களையும் போலீசார் டோல்கேட்டுகளில் தடுத்து நிறுத்தினர்.
இதனை கண்டித்து, பல இடங்களில் ஆசிரியர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து வாகனங்கள் மூலம் கோட்டையை நோக்கி புறப்பட தயாரான 20-க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வடக்கு இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பஸ், வேனில் சென்னைக்கு புறப்பட முயன்ற 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப் பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள், 25-க்கும் மேற்பட்டோர் கோட்டையை நோக்கி செல்வதற்காக திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே திரண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி நெக்குந்தி டோல்கேட்டில், டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டையை நோக்கி ஆசிரி யர்கள் சென்ற வாகனங்களை மடக்கி நிறுத்தினர்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சென்ற வாகனங்களும் டோல் கேட்டில் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட வெளி மாவட்ட ஆசிரியர்கள் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வாலாஜா டோல்கேட்டிலும் ஆசிரியர்கள் சென்ற பஸ், வேன்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தென்கடப்பந்தாங்கல் முதல் டோல்கேட் வரை, சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.
மேலும் ஜோலார் பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, வாலாஜா, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் கோட்டையை நோக்கி செல்ல முயன்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.