திருவட்டாரில் ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை, பணம் கொள்ளை

திருவட்டாரில் ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டாரில் ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை, பணம் கொள்ளை
Published on

திருவட்டார்:

திருவட்டார் வெட்டுப் புலியைச் சேர்ந்தவர் மரியதாசன் (வயது 73). இவரது மனைவி சுந்தரபாய். இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். 

மரியதாசன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 13-ந் தேதி தோட்டவரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு சென்றார். டாக்டர்கள் அவரை உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். எனவே மரியதாசன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தார். அவருடன் உறவினர்களும் இருந்தனர். இதனால் வெட்டுப்புலியில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இன்று காலை சிகிச்சை முடிந்து மரியதாசன் அவரது வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த மரியதாசன் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. 

பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி மரியதாசன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மரியதாசன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.  மரியதாசன் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அவர்களை கண்டுபிடிக்க அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்தனர். இதில் ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் பதிவான காட்சிகளில் மரியதாசன் வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்தது பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மரியதாசனின் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com