ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்த ஆசிரியர் கைது

ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்தனர்.
ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்த ஆசிரியர் கைது
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒகளூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி ஜெயா(வயது 45). இவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி சார்பில் கடந்த மாதம் புதிதாக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயா கடந்த 22-ந் தேதி தனது ஏ.டி.எம். கார்டை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா? என்பதனை ஏ.டி.எம். மையத்தில் சோதனை செய்து வருமாறு அருகே வசிக்கும் அறிவழகன் மகன் அன்பழகனிடம்(27) கொடுத்துள்ளார்.

அவரும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் சோதனை செய்து விட்டு ஏ.டி.எம். கார்டை பயன்பாட்டிற்கு வந்து விட்டது என்று ஜெயாவிடம் கொடுத்து விட்டு சென்றார். இதையடுத்து ஜெயா தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சம்பவத்தன்று பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் உங்கள் வங்கி கணக்கில் ஏற்கனவே ரூ.40 ஆயிரம் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயா சம்பவத்தன்று அன்பழகனிடம் தான் ஏ.டி.எம். கார்டை கொடுத்தோம். அவர் தான் பணத்தை எடுத்திருப்பார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்பழகன் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com