விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்பாட்டில்கள் கொள்ளை

விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்பாட்டில்கள் கொள்ளை
Published on

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக ரமேஷ் என்பவரும், மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் 2 பேரும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களால் உடைக்க முடியவில்லை. உடனே கடையின் முன்பக்க இரும்பு ‌ஷட்டரில் மாட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கு அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மொத்தம் ரூ.1½ லட் சம் மதிப்புள்ள மதுப்பாட்டிகளை எடுத்து சென்று விட்டனர்.

இன்று மதியம் வழக்கம்போல் விற்பனையாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் கடைக்கு வந்தனர்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com