டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள் - பணம் கொள்ளை

பெருங்குடி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள் - பணம் கொள்ளை
Published on

பேரையூர்:

மதுரை, பெருங்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வலையப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு திருமங்கலம் கொடி மரத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரகு (வயது 44) என்பவர் மேலாளராகவும், முருகேசன் என்பவர் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருவரும் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.

வலையப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (48) என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கம், 144 மது பாட்டில்களை திருடினர்.

அப்போது சத்தம் கேட்டு எழுந்த இப்ராகிம்ஷா திருடன்.... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com