தமிழகத்திலும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு- குவார்ட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்வு

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை
Published on

சென்னை:

ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் விலை உயர்த்தப்படுகிறது. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் மதுபானங்கள் விலை 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

நடுத்தர, பிரீமியம் வகை 180 மிலி மதுபான பாட்டில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மதுபானங்களின் விலை நாளை முதல் அமலுக்கு வரும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துளள்து. 

2018-19ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.31157 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com