தஞ்சை பெரியகோவிலின் குடமுழுக்கை நடத்த தடை கோரி புதிய வழக்கு

தஞ்சை பெரியகோவிலின் குடமுழுக்கை நடத்த தடை கோரிய வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஐகோர்ட் மதுரை கிளை
ஐகோர்ட் மதுரை கிளை
Published on

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் இன்று வழக்கம்போல் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது வக்கீல் சரவணன் தரப்பில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக முறையீடு முன்வைக்கப்பட்டது.

அதில், தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை நடத்த தொல்லியல் துறையின் அனுமதி பெறவில்லை. எனவே குடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரினார்.

அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளை நாளை (28-ந்தேதி) பட்டியலிடுமாறு கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்குகளை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

ஏற்கனவே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்ற வழக்கில், மதுரை ஐகோர்ட்டு இன்று அறநிலைய துறையினரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரமேஷ், குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் தலைவர் மணியரசன் தமிழிலேயே குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்குகளும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com