கடைமடைக்கு 10 நாட்களுக்குள் தண்ணீர் சென்று விடும்- அமைச்சர் கே.என்.நேரு

தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.
கடைமடைக்கு 10 நாட்களுக்குள் தண்ணீர் சென்று விடும்- அமைச்சர் கே.என்.நேரு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 முதல் 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 4 கி.மீ. வரை மட்டுமே தூர்வார வேண்டி உள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீதப் பணிகள் முடிவடைந்து விடும்.

இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரிலும், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 976 ஏக்கரிலும் என மொத்தம் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, எதிர்நோக்கு மழை, கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com