

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது.
மேலும் திமுக கூட்டணியில் தலா 2 இடங்கள் வென்ற விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரி வந்தது.
இழுபறிக்கு பின் இக்கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.
விஜய் 3 முறை ஆளுனரை சந்தித்து மெஜாரிட்டி இல்லாமல் திரும்பிய நிலையில் நான்காவது முறையாக இன்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் சந்தித்து ஆட்சி அமைக்க ஆளுநரின் ஒப்புதலை பெற்றார்.
ஆதரவு கட்சிகளுடன் சேர்த்து 120 இடங்கள் இருந்ததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடும் இழுபறிக்கு பின் விஜய் முதல்வர் பதவி ஏற்க உள்ளதை தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தவெகவினர் வீதிகளில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், நாளை தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்தாலும், அதை என் மகனுக்காக மட்டுமே செய்கிறேன்.
இறுதியாக, விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்" என்று தெரிவித்தார்.