

சென்னை:
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளி மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
பூங்காவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதரவையும் அன்பையும் தெரிவிக்கும் விதமாக 'வீல் ஆப் பிரதர்குட் என்கிற பைக்கர்ஸ் குழுவைச் சேர்ந்தவர் குழந்தைகளோடு கலந்துரையாடினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைத்தது போன்று மற்ற கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை அமைப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்துகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி கொடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மாடல் என்னும் கூற்றை அதிமுக ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டது என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, 'உதயநிதி ஸ்டாலின் அப்படியா நல்லாருக்கு' என்று பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.