என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2வது மாநில மாநாடு: தேதியை அறிவித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
- த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி மதுரையில் நடைபெறும்.
- மாநாட்டுக்கான பணிகள் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வரும் 25-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது.
கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.
மாநாடு நடைபெறும் 25-ம் தேதியை தொடர்ந்து 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என போலீசார் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு 18-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு தேதியில் நடைபெறும். எந்த தேதி என்பதை தலைவர் விஜய் அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு ஆகஸ்டு 21-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள், ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.






