

சென்னை :
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான அளவில் வெற்றிகளை வழங்கியுள்ள மக்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கு காட்டுமன்னார்குடி மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு இடங்களில் வெற்றியையும் எஞ்சிய ஆறு தொகுதிகளில் கணிசமான வாக்குகளையும் அளித்துள்ள வாக்காளர்களுக்கும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் யாவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின் தாய்மடி' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அத்தொகுதிவாழ் பொதுமக்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.
ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெக'வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை.
இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதேபோல 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினர் அனைவருமே தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக தற்போது 20 இடங்களை இழந்து நிற்கிறது. 46இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து நின்றதற்காக மக்கள் அளித்துள்ள படிப்பினை ஆகும். அதிமுக தலைமையிலான பாஜக அணியின் இந்த வீழ்ச்சி, எமது முயற்சியால் விளைந்தததேயாகும். இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெக'வை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக,அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது. அதாவது, திமுக அணிக்கும் தவெகவுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை யாவும் அதிமுக தலைமையிலான சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் வலதுசாரி அரசியலுக்குத் துணைபோகும் கும்பலுக்கும் இடமில்லை என்பதை மிகவும் வலுவாக மீள்உறுதி செய்துள்ளது.
எனவே, திமுக தலைமையிலான எமது கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான அறப்போரில் யாம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். பாஜகவின் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது. வலதுசாரி அரசியலின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. இனி எக்காலத்திலும் இம்மண்ணில் சங் பரிவார்கள் வாலாட்ட இயலாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாதியவாத, மதவாத, இனவாத கும்பலின் பிற்போக்குத்தனமான திரிபுவாத அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதுவும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய நுட்பமான அரசியலை இத்தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ள வாக்காளப் பொதுமக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் மனம்நிறைந்த நன்றியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.