என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல் - கவர்னர் தமிழிசை

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல் என்றார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

கோவை:

கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோவையில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து.

இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுகிறேன். கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும்.

இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை முற்றிலும் ஆராய்ந்தது இதை போன்ற இடங்கள் எங்கும் இல்லை என்பதை தமிழக காவல் துறை உறுதிசெய்ய வேண்டும். கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும். இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குண்டு வெடித்து பா.ஜ.க. சொல்லிதான் மக்கள் பீதி அடைய வேண்டுமா?

மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளைப் பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளனர். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது.

ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை.

எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com