பள்ளிப்பட்டில் தரைப்பாலம் உடைந்தது- 10 கிராமங்கள் துண்டிப்பு

கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது.
பள்ளிப்பட்டில் தரைப்பாலம் உடைந்தது- 10 கிராமங்கள் துண்டிப்பு
Published on

திருவள்ளூர்:

தமிழக ஆந்திர எல்லையான கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அம்மப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் அம்மப்பள்ளி அணை நிரம்பியதையடுத்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அம்மம்பள்ளி அணையில் இருந்து 8 கி.மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் தற்போது கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காப்பேட்டை, சாமந்தவாடா, நெடியம், மற்றும் விடியங்காடு வழியாக தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பெய்த மழையால் சாமந்தவாடா தரைப்பாலம் சேதம் அடைந்து இருந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து இருந்தனர். அந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது.

இந்தநிலையில் அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. எனவே சாமந்தவாடா தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com