

செங்குன்றம்:
சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஓலை கொட்டகையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் பற்றி எரிந்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது கொட்டகையில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.