கேமரா செயல்படவில்லை என்பதால் மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதா? அமைச்சர் அதிருப்தி

தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
கேமரா செயல்படவில்லை என்பதால் மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதா? அமைச்சர் அதிருப்தி
Published on

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள டுமிங்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு பதிவு செய்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமக்கு நாமே மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாகவே நடந்துள்ளது. தற்போது சென்னையில் குடிசை பகுதிகளை மையமாக வைத்து மருத்துவ முகாம்கள் நகருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய அமைப்பு அங்கு ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாததை காரணம் காட்டி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறது. இது 30 நிமிடத்தில் சரி செய்யக் கூடிய விஷயம். இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?

நேற்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தவறான தகவலை வெளியிட்டார்கள்.

தேர்தல் நெருங்குவதால் மத்திய அமைப்புகள் மூலம் சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு தேடுகிறார்கள்.

இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக மாநில அரசின் உரிமைக்கு எதிராக செயல்படுவது அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுத்தும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மத்திய சுகாதார மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

அப்போது எல்லா விஷயங்களையும் எடுத்துரைப்போம். இந்த மாதிரி தமிழகத்தின் தரமான மருத்துவ கட்டமைப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com